பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள இரயில்வே விசாரணை மையத்தில் பணிபுரியும் எழுத்தர் ஒருவர், தனக்கு முன்னால் மைக் இருக்கும் போதே நாற்காலியில் அமர்ந்து கொண்டு நிம்மதியாக தூங்குகிறார். ஆனால், மறுபுறம் இரயில்களின் வருகை மற்றும் தளம் குறித்த விவரங்களை அறிய ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். பயணிகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அந்த ஊழியர் தூங்கும் காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பயனர் ஒருவர், “இந்த ஊழியரை இரயில்வே நிர்வாகம் பணிநீக்கம் செய்யும் வரை இந்த வீடியோவை தொடர்ந்து பகிருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் இரயில்வே ஊழியர்களின் இத்தகைய அலட்சியப் போக்கைக் கண்டித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசு வேலை என்றால் நிம்மதியாக தூங்கி சம்பளம் வாங்கலாம் என்ற எண்ணத்தில் தான் மக்கள் அலைகிறார்கள் என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகி மக்களின் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, இந்திய இரயில்வேயின் குறைதீர்க்கும் முகமையான ‘இரயில்வே சேவா’ இதற்கு உடனடியாகப் பதிலளித்துள்ளது. இந்த விவகாரத்தை இரயில்வே நிர்வாகம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த ஊழியர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
