ஜூனியர்களை ‘முருகா’ பொசிஷனில் நிக்க வச்சு டார்ச்சர்…. மருத்துவக் கல்லூரியில் 6 சீனியர் டாக்டர்கள் அதிரடி சஸ்பெண்ட்…!

By Swetha on ஆனி 21, 2026

Spread the love

குஜராத்தில் உள்ள பவநகர் அரசு மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் துறையில், முதலாம் ஆண்டு படிக்கும் 13 ஜூனியர் மருத்துவர்களைக் கொடூரமாக ரேகிங் செய்த புகாரில் 6 சீனியர் ரெசிடென்ட் மருத்துவர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஜூனியர் மருத்துவர்கள் ஆன்லைன் போர்ட்டலில் அளித்த புகாரின் பேரில், கல்லூரியின் ரேகிங் தடுப்புக் குழு மற்றும் குஜராத் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து விடிய விடிய நடத்திய நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக இந்த ஜூனியர் மருத்துவர்கள் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சை அரங்கிலேயே அவர்கள் ‘முருகா’ நிலையில் நிற்க வைக்கப்பட்டதாகவும், தசைப்பிடிப்பு அல்லது மயக்கம் ஏற்படும் வரை தோப்புகரணம் போட வைக்கப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், இரவு முழுவதும் தூங்காமல் நிற்க வைத்து, அதை உறுதிப்படுத்த ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் செல்ஃபி அனுப்ப கட்டாயப்படுத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி, சீனியர்களுக்காக உணவு மற்றும் மதுபானங்கள் வாங்க ஜூனியர்கள் தங்களின் சொந்தப் பணத்தில் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வைக்கப்பட்டு பொருளாதார ரீதியாகவும் சுரண்டப்பட்டுள்ளனர்.

   

இந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தவறிழைத்த சீனியர் மருத்துவர்களில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளும், மூன்று பேருக்கு தலா ஒரு ஆண்டும், இருவருக்கு ஆறு மாதங்களும் சஸ்பெண்ட் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக் காலத்தில் அவர்கள் கல்வி, மருத்துவமனைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடத் தடையும், உடனடியாக விடுதிகளை காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துப் பேசிய குஜராத் சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரபுல் பன்ஷேரியா, ரேகிங் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு எதிராக அரசு ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையைக் கொண்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை முடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.