தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, தற்போதைய உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், தற்போது அமைந்துள்ள புதிய அரசு, இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தின் பெயரை ‘திறன் தமிழ்நாடு கார்ப்பரேஷன்’ என மாற்றியதோடு, மே 15-ஆம் தேதிக்கு முந்தைய அனைத்துப் பதிவுகளையும் நீக்கியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ என்பது மு.க.ஸ்டாலின் பெயரிலோ அல்லது கலைஞர் பெயரிலோ அமைக்கப்பட்ட திட்டம் கிடையாது என்று கூறியுள்ளார். ஆயினும், ‘நான் முதல்வன்’ என்று சொன்னாலே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பெயர்தான் மக்களுக்கு நினைவுக்கு வரும் என்ற குறுகிய எண்ணத்தோடு புதிய அரசு இத்திட்டத்தின் பெயரை மாற்றி, அதன் சாதனைப் பதிவுகளையும் நீக்கியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் புதிய அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசிய அவர், தேர்தல் பரப்புரையின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து வீர வசனம் பேசிய இன்றைய முதலமைச்சரின் நிலை, திரைப்பட பாணியில் “கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருப்பது” போலத்தான் இருக்கிறது என்று சாடினார். அத்துடன், பேரிடர் காலங்களில் உணவு மற்றும் எரிபொருட்களை மக்கள் அவசரமாக வாங்குவதைப் போல, ஆட்சி அமைந்த நாள் முதலே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து முதலமைச்சர் ‘பானிக் பையிங்’ செய்து வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் எள்ளி நகையாடியுள்ளார்.
