பயங்கரவாதம் முதல் வினாத்தாள் கசிவு வரை… டெலிகிராம் செயலியால் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து…? நீதிமன்றத்தில் மத்திய அரசு பகீர் குற்றசாட்டு..!!

By Soundarya on ஆனி 18, 2026

Spread the love

டெலிகிராம் செயலி நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நீட் (NEET-UG) மறுதேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி விவகாரங்களில் இந்தச் செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்டதை அடுத்து, ஜூன் 22 வரை நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது, ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நீதிமன்றத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது.

ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், சிறார் துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடிகள் போன்ற சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் தளம் மிக எளிதாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தச் செயலியில் உள்ள பிரத்யேகப் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதன் தனித்துவமான வடிவமைப்பு காரணமாக, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் புலனாய்வு அமைப்புகளால் எளிதில் கண்டறிய முடிவதில்லை என்றும், இது நாட்டின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தல் என்றும் அரசு கடுமையாக வாதிட்டுள்ளது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.