உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள விடுதி ஒன்றில், 27 வயதான மென்பொருள் பொறியாளர் பி. ராதா காயத்ரி என்பவர் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ளார். அவரது மூக்கிலிருந்து இரத்தம் வழிந்திருந்த நிலையிலும், படுக்கை மற்றும் போர்வைகளில் இரத்தக் கறைகள் படிந்தவாறும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவர் தங்கியிருந்த அறையிலிருந்து காலியான மதுபாட்டில் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ராதா காயத்ரி தனது கணவர் சௌம்யா ஸ்ரீசரனுடன் முசோரிக்கு சுற்றுலா வந்திருந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி வெறும் 8 மாதங்களே ஆகின்றன. காலையில் தான் தூங்கி எழுந்தபோது தனது மனைவி சுயநினைவின்றி மயங்கிக் கிடந்ததாக அவரது கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ராதா காயத்ரி மற்றும் அவரது கணவர் இருவருமே தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணிபுரிந்து வரும் தம்பதியர் ஆவர். மனைவி குருகிராமிலும், கணவர் புனேவிலும் உள்ள நிறுவனங்களில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இந்த மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
