உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ப்ளூ டிரம் கொலை வழக்கைத் தொடர்ந்து, தற்போது அதே பகுதியில் அரங்கேறியுள்ள “விஷம் கலந்த பாயசம்” கொலைச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய ஒரு நட்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட அந்தப் பெண், தனது கணவனைத் தீர்த்துக்கட்ட ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். அதன்படி, வீட்டில் பாயசம் செய்து அதில் விஷத்தைக் கலந்து கணவனுக்குக் கொடுத்துள்ளார். விஷப் பாயசத்தைச் சாப்பிட்டு அந்த நபர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து, தலையணையால் அவரது முகத்தையும் தொண்டையையும் பலமாக அமுக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
கணவனைக் கொன்ற பிறகு, அந்தப் பெண் மிகவும் சாதுரியமாக நாடகமாடியுள்ளார். விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் காரணமாகவே தனது கணவர் உயிரிழந்ததாகக் கூறி, அதை ஒரு இயற்கையான மரணம் போலக் காட்ட முயன்றார். ஆனால், உயிரிழந்த நபரின் உடற்கூறாய்வு முடிவுகள் மற்றும் போலீசாரின் தீவிர விசாரணையில், பாயசத்தில் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டது அக்குவேறு ஆணிவேறாக அம்பலமானது. இந்த கொடூரக் கொலை தொடர்பாகக் குற்றவாளியான மனைவியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய அவரது கள்ளக்காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமூக ஊடகத்தில் தொடங்கிய ஒரு காதல், இறுதியில் ஒரு குடும்பத்தையே முற்றிலுமாக அழித்து முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
