உலகளாவிய எரிபொருள் சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பதுக்கல்களைத் தடுக்கும் நோக்கில், பெட்ரோல் நிலையங்களில் ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. மேலும், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற பெரிய நுகர்வோர்கள் (Bulk Users) சில்லறை விற்பனை நிலையங்களான பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வாங்குவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தற்காலிக உத்தரவு முதற்கட்டமாக 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி போன்ற நகரங்களில் சில்லறை விற்பனை பங்குகளில் ஒரு லிட்டர் டீசல் சுமார் 95.20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், மொத்தமாக வாங்கும் நிறுவனங்களுக்கு அதன் விலை சுமார் 134.50 ரூபாயாக உள்ளது. இந்த பெரிய விலை வித்தியாசம் காரணமாக, தொழிற்சாலைகளும் வணிக வாகனங்களும் சில்லறை விற்பனை நிலையங்களை நோக்கிப் படையெடுத்ததால், சாதாரண பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய டீசலுக்குப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவானது.
இதைத் தடுக்கும் பொருட்டே, புதிய விதிகளின்படி டீசலை நேரடியாக வாகனங்களின் எரிபொருள் தொட்டிகளிலோ அல்லது உரிய பாதுகாப்பு அனுமதி பெற்ற (PESO) கொள்கலன்களிலோ மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும், ஒரு வாகனத்திற்கு 200 லிட்டருக்கு மேல் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சில்லறை விலையில் வாங்கப்படும் டீசலை மறுவிற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவை மீறி பதுக்கல் அல்லது கள்ளச்சந்தையில் ஈடுபடுபவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
