சமூக ஊடகங்களில் சமீபகாலமாக காகித ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு, அவற்றிற்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வேகமாகப் பரவின. மேலும், வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல் தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாதவையாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. இந்தத் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், தேவையற்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
பொதுமக்களின் இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எந்தவொரு திட்டமும் தற்போதைக்கு அரசிடம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூன் 30 முதல் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பரவும் தகவலும் முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்படும் இதுபோன்ற போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
