உத்தரப்பிரதேசம் மீரட் பகுதியைச் சேர்ந்த சாதனாவிற்கும், டெல்லியைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு நைனிடாலுக்குத் தேனிலவு செல்ல தம்பதியினர் திட்டமிட்டனர். ஆனால், சாதனா எதிர்பார்க்காத விதமாக விவேக் தனது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அந்தப் பயணத்திற்கு அழைத்துச் சென்றார். இதனால் அது தேனிலவாக அமையாமல் ஒரு குடும்பப் பயணமாக மாறியதால், கணவன்-மனைவி இடையே தேனிலவிலும், அது முடிந்த பிறகும் தொடர்ந்து அடிக்கடி வாக்குவாதங்களும் கடுமையான கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன.
இந்தப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், விவேக் அடுத்ததாக துபாய்க்கு இரண்டாவது தேனிலவுப் பயணத்தைத் திட்டமிட்டார். ஆனால், இந்த முறையும் தனது பெற்றோரையும் உடன்பிறந்தவர்களையும் உடன் அழைத்துச் செல்ல விவேக் முடிவெடுத்ததால் சாதனா கடும் அதிர்ச்சியடைந்து கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இத்தொடர் மோதல்களால் மனமுடைந்த சாதனா, இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், இந்தத் தம்பதியினர் குடும்பக் கவுன்சிலிங் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கவுன்சிலிங்கின் போது, கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் பந்தத்தை வளர்த்துக் கொள்ளவும் தேனிலவு ஒரு நல்ல வாய்ப்பு என்றும், ஆனால் குடும்பத்தினர் எப்போதும் கூடவே இருந்ததால் தனக்கு கணவருடன் தனியாக நேரத்தை செலவிட வாய்ப்பே கிடைக்கவில்லை என்றும் சாதனா ஆதங்கப்பட்டார். விவேக்கோ, குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே அவர்களை அழைத்துச் சென்றதாகத் தன் செயலை நியாயப்படுத்தினார். நான்கு முறை கவுன்சிலிங் நடத்தியும் இருவரும் தங்களது முடிவிலிருந்து இறங்கி வராததால், தற்போது அந்தப் பெண் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
