தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பைச் சரிசெய்யவும், டாஸ்மாக் ஊழியர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் கூடுதல் விலை வசூல் முறைகேடு போன்ற நிர்வாகச் சிக்கல்களைக் கட்டுப்படுத்தவும் அரசு ஆலோசித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பார்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தனியார்மயமாக்க தலைமைச் செயலக வட்டாரத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகப் பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த புதிய திட்டத்தின்படி, மதுபான மொத்த கொள்முதலை மட்டும் அரசே தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பா்களை ஏல முறையில் தனியாருக்கு வழங்கும் பிபிபி மாடலைச் செயல்படுத்த அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய உரிம முறை அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகாத நிலையில், தனியார்மயமாக்கல் முறையினால் தங்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் 25,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளனர்.
