கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தனது வீட்டின் குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது குளியலறையின் வெண்டிலேஷன் ஜன்னல் கண்ணாடி அகற்றப்பட்டு, அதன் வழியே ஒரு செல்போன் உள்ளே நீட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டைச் சுற்றித் தேடியபோது, காம்பவுண்ட் சுவர் மீது மறைந்திருந்த நபரைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ஷானு (34) என்பது தெரியவந்தது. இவர் சிறுமியின் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி, குளியலறை வெண்டிலேஷன் ஜன்னல் வழியாகச் சிறுமியின் ரகசியக் காட்சிகளைத் தனது செல்போனில் படம் பிடித்ததை ஒப்புக்கொண்டார். பொதுமக்களின் தாக்குதலில் காயமடைந்த ஷானுவுக்குக் குளச்சல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஷானுவின் செல்போனைக் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஷானு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதான ஷானு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மாவட்ட மகிளா நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
