மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 13 வயது சிறுமியை, 42 வயது நபருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி தரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமியின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது தாய் மறுமணம் செய்துகொண்டு தனியாகச் சென்றுவிட்டார். இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த அந்தச் சிறுமி, தனது தாத்தா மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்தார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட சிறுமியின் தாத்தா, பேரக் குழந்தையைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, அவளை விட 29 வயது மூத்த நபரான 42 வயது நபருக்குத் திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார்.
இந்தச் சட்டவிரோதப் (குழந்தை திருமணம்) குறித்த தகவல் அதிகாரிகளுக்குத் தெரியவந்ததை அடுத்து, போலீசார் உடனடியாகச் செயல்பட்டு வழக்கைப் பதிவு செய்தனர். சட்டத்தை மீறி இந்தத் திருமணத்தை நடத்த முயன்ற மணமகன், சிறுமியின் தாத்தா மற்றும் இந்த நிகழ்விற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் என மொத்தம் 13 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
