சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி, கடந்த 2024 மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென காலமானார். ‘வேட்டையாடு விளையாடு’, ‘வடசென்னை’ போன்ற திரைப்படங்களில் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவரது 48-வது வயதிலேயே நேர்ந்த மறைவு, ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது தாயார் தனது மகனின் இறுதி நாட்களைப் பற்றி பகிர்ந்துள்ள உருக்கமான தகவல்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
டேனியல் பாலாஜிக்கு தனது மறைவிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே அதுகுறித்த ஏதோவொரு உள்ளுணர்வு இருந்ததாக அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார். வீட்டில் ஒரு உரையாடலின் போது, குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் இனி தனது தம்பிதான் பார்த்துக் கொள்வான் என்று அவர் கூறியதை அப்போது சாதாரணமாக நினைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், அவர் இறப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கூட, தாயாரைத் தொடர்புகொள்ள முயன்று தனது சகோதரியிடம் பேசியுள்ளார், ஆனால் அதற்குள் மாரடைப்பு ஏற்பட்டு அனைத்தும் முடிந்துவிட்டதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சிறு வயது முதலே தான தர்மங்கள் செய்யும் குணம் கொண்ட டேனியல் பாலாஜியின் ஆன்மா, அவர் ஆசையோடு கட்டிய கோவிலிலேயே சுற்றிக் கொண்டிருப்பதாக அவரது தாயார் உணருகிறார். பலர் அந்த கோவிலின் பூஜை நேரத்தில் அவரது உருவத்தைப் பார்த்ததாகக் கூறியுள்ள நிலையில், தன் கண்களுக்கும் அவர் பலமுறை தெரிந்திருப்பதாக உருக்கமாகக் கூறியுள்ளார். திரையில் கொடூரமான வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் அமுதனைப் போல் இல்லாமல் உதவி செய்யும் நல்ல மனிதராக வாழ்ந்த டேனியல் பாலாஜியின் நினைவுகள் ரசிகர்களின் மனதை கனக்கச் செய்துள்ளது.
