சென்னை அடுத்த தண்டலம் தாரப்பாக்கம் நாச்சியார் ஹவுஸ் பகுதியில் நடந்து வந்த தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பு தளம், இரண்டு நடிகைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் திடீரென போர்க்களமாக மாறியுள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் மூத்த நடிகை ஆர்த்தி ராம் மற்றும் டிக் டாக் புகழ் நடிகை சசிலயா ஆகிய இருவருக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல், தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவத்தன்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், தனது காட்சியை முடித்துவிட்டு கடுமையான களைப்புடன் ஓய்வெடுக்க வந்த மூத்த நடிகை ஆர்த்தி ராமுக்கு, அங்கு சோபாவில் அமர்ந்திருந்த சசிலயா மற்றும் துணை நடிகைகள் இடம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு துணை நடிகை எழுந்து இடம் கொடுக்க முயன்றபோதும், சசிலயா அவரை தடுத்து அமர வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி ராம், சீனியர் என்ற மரியாதையின்றி நடந்துகொண்டதாகக் கூறி சசிலயாவின் கையில் ஓங்கி அடித்து, அவரைத் தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த சசிலயா, “என்னை அடிக்க நீ யாருடி?” என்று ஆவேசமாக எகிறி, படப்பிடிப்பு தளமே அதிரும் அளவுக்குக் கூச்சலிட்டுள்ளார். விவகாரம் கைமீறிப் போக, இரு நடிகைகளும் ஒருவரையொருவர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தபடியே கடுமையான மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதுகுறித்து சீரியல் இயக்குநரிடம் சசிலயா புகார் அளிக்க, அவர் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், இயக்குநர் முன்னிலையிலேயே இருவரும் எல்லையை மீறி திட்டித் தீர்த்துக் கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு நீடித்தது.
அப்போது தற்காலிகமாகச் சமாதானம் செய்யப்பட்டாலும், படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த குடுமிப்பிடி சண்டையை அங்கிருந்த சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், இயக்குநர் இரு நடிகர்களிடமும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை இருவரும் படப்பிடிப்பு தளத்தில் நேரடியாகச் சந்திக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், இருவரும் காவல்துறையை நாட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
