அவதூறு பரப்பிய பிஆர் ஏஜென்சி..? நான் அவ்வளவு தரம் தாழ்ந்தவன் அல்ல.. திமுக-அதிமுக டீல் வதந்திக்கு ரஜினிகாந்த் கொடுத்த மரண அடி.. பின்னணி என்ன..?

By Swetha on வைகாசி 17, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சில பிஆர் (PR) நிறுவனங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அவசரமாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். தொங்கு சட்டமன்றக் கணக்குகளுக்கு இடையே, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யின் வெற்றியை ரஜினிகாந்த் விரும்பவில்லை என்றும், அதற்கு முட்டுக்கட்டை போட திமுக – அதிமுக இடையே கூட்டணி அமைக்க அவர் தூது சென்று குதிரை பேரம் பேசினார் என்றும் பரவிய வதந்திகளுக்கு அவர் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.

திமுக மற்றும் அதிமுக இடையே தான் டீல் பேச முயன்றதாக எழுந்த விமர்சனங்களைக் கடுமையாக மறுத்த ரஜினிகாந்த், தான் அந்தளவுக்குத் தரம் தாழ்ந்துப் போகும் நபர் அல்ல என்று காட்டமாகக் குறிப்பிட்டார். தேர்தல் தோல்விக்குப் பிறகு கொளத்தூர் தொகுதியில் தோற்ற மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது உண்மைதான் என்றும், தங்களுக்குள் இருக்கும் 35-40 ஆண்டுகால நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் உணர்ச்சிப்பூர்வமாக விளக்கினார். தான் அமைதியாக இருந்தால் இந்த வதந்திகளை மக்கள் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்பதால் தான் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியதாகக் கூறினார்.

   

மேலும், புதிய முதலமைச்சர் விஜய் மீது தனக்குப் பொறாமை இருப்பதாகக் கூறப்படுவதைச் சிரித்துக்கொண்டே மறுத்த ரஜினிகாந்த், தமக்கும் விஜய்க்கும் இடையே 25 ஆண்டுகால தலைமுறை இடைவெளி உள்ளதாகக் குறிப்பிட்டார். மத்திய அரசு மற்றும் இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து நின்று விஜய் பெற்றுள்ள இந்த மகத்தான சாதனை, அன்றைய காலத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் செய்ததை விடப் பெரியது என்று மனதாரப் பாராட்டினார். தமிழகத்திற்குத் தேவையான மாற்றத்தைக் கொண்டுவர விஜய் சரியான இடத்தில் இருக்கிறார் என்றும், புதிய அரசியல் பொறுப்பில் தன்னை நிரூபிக்க அவருக்கு மக்கள் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.