சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) கரிகாட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் – செல்லமீனா தம்பதியின் மகன் பிரகலாதன் (13). முட்டுக்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்த இவன், தற்போது கோடைக்கால விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளான். விடுமுறை நாட்களைப் பயனுள்ள வகையில் கழிக்க எண்ணிய பிரகலாதன், தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பொழுதுபோக்கிற்காக அருகில் உள்ள கெனால் பகுதிக்கு இறால் பிடிக்கச் சென்றுள்ளான்.
இருவரும் கால்வாய் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பிரகலாதன் ஆழமான பகுதியில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளான். கால்வாயின் அடிப்பகுதியில் இருந்த சேற்றில் கால்கள் சிக்கிக்கொண்டதால், அவனால் வெளியே வர முடியாமல் போனது. இதில் பரிதாபமாக மூழ்கி பிரகலாதன் உயிரிழந்தான். அவனுடன் சென்ற நண்பர், இச்சம்பவத்தைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிலர் சிறுவர்கள் கெனால் பகுதிக்குச் சென்றதைக் கூறவே, சந்தேகம் அடைந்த தாய் செல்லமீனா கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், தண்ணீரில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சேற்றில் சிக்கிய நிலையில் பிரகலாதனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மகனின் சடலத்தைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்கச் சென்ற மாணவன், இறால் பிடிக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
