உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித் பாண்டே என்பவருக்கும், பிரமீளா என்ற பெண்ணுக்கும் மே 8-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தன்று மணமகன் அங்கித் தனது தம்பி சர்வ்ஜீத்துடன் இருசக்கர வாகனத்தில் சலூனுக்குச் சென்றபோது, பள்ளிப் பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் அங்கித்தின் தம்பி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கித் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தம்பியின் மரணத்தால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும், இரு குடும்பத்தினரும் பேசித் திருமணத்தை அதே நாளில் நடத்த முடிவு செய்தனர். கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அங்கித், அமரவோ அல்லது நிற்கவோ முடியாத நிலையில் இருந்தார். இதனால், அவர் ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வாகனத்தில் படுத்த நிலையிலேயே மணமகள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வீட்டு முற்றத்தில் திருமண மண்டபம் தயாராக இருந்தும், மணமகனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு திருமணம் அவர் படுத்திருந்த காரின் உள்ளேயே நடைபெற்றது. வைதீக மந்திரங்கள் முழங்க, காரில் படுத்தபடியே அங்கித் மணமகள் பிரமீளாவிற்கு தாலி கட்டி, நெற்றியில் குங்குமம் வைத்தார். ஒரு பக்கம் தம்பியை இழந்த துக்கம், மறுபக்கம் காயங்களுடன் நடந்த திருமணம் என அந்த இடமே கண்ணீரில் நனைந்திருந்தது.
