கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கீசன்பெர்ல் என்ற சிறுவன், இரவு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தரைதளத்தில் விழுந்துள்ளார். இதில் சிறுவனுக்கு பலத்த அடிபட்டதாகத் தெரிகிறது.
கீழே விழுந்த அதிர்ச்சியில் சிறுவன் மயக்கமடைந்ததைக் கண்ட பெற்றோர், பதற்றத்துடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிறுவனின் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
