மதுரையில் பரபரப்பு : பதவியேற்புக்கு முன்பே “அமைச்சர்” பட்டம்… வைரலாகும் போஸ்டர்…!

By Nanthini on வைகாசி 9, 2026

Spread the love

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ. விஸ்வநாதன், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியில் சுமார் 2,731 வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில், ஒரு தலித் வேட்பாளராகக் களம் கண்டு விஸ்வநாதன் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மதுரைவீரன் பிரித்த வாக்குகள் முக்கிய காரணியாகப் பார்க்கப்படும் நிலையில், தவெக – காங்கிரஸ் இடையேயான இந்த மறைமுகமான அரசியல் சமன்பாடு அதிமுகவின் பலத்தை மேலூரில் சரித்துள்ளது.

தமிழகத்தில் 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க, மதவாத சக்திகளைத் தவிர்க்கும் நோக்கில் காங்கிரஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விஜய் இன்னும் முதல்வராகப் பதவியேற்காத சூழலில், மேலூரின் பல்வேறு பகுதிகளில் பெ. விஸ்வநாதனை “அமைச்சர்” எனக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில் விஸ்வநாதனுக்கு முக்கிய இடம் ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ள நிலையில், இது தேசிய அளவிலான இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்களையும் மேலெழச் செய்துள்ளது.