தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவு கோரிக்கை குறித்து விவாதிக்க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக ) உயர்நிலைக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்குக் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தவெக முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக கட்சி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று மாலை விரிவான ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு, தங்களின் இறுதி நிலைப்பாடு குறித்து நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தவெகவின் இந்த திடீர் அரசியல் நகர்வும், அதற்கு விசிக அளிக்கப்போகும் பதிலும் தமிழகக் கூட்டணி அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
