“செல்போனால் வந்த வினை!… தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கொடூரத் தாக்குதல்.. குடிபோதையில் பக்கத்து வீட்டுக்காரர் செய்த வெறிச்செயல்… பதறவைக்கும் பின்னணி”…!!!

By Muthu Mani on சித்திரை 29, 2026

Spread the love

தெற்கு டெல்லியின் பேகம்பூர் பகுதியில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறு, கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (25) என்பவர் அங்குள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு மது அருந்தியிருந்த ராகேஷ், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்ருஜன் என்பவரின் செல்போனைப் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்தவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், மது போதையில் இருந்த ராகேஷிற்கு ஆத்திரம் குறையவில்லை. நள்ளிரவு சுமார் 1 மணியளவில், சத்ருஜன் தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ராகேஷ் ஒரு மரக்கட்டையுடன் அங்கு சென்றுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த சத்ருஜனை மரக்கட்டையால் ராகேஷ் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சத்ருஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

   

கொலைக்குப் பிறகு அங்கிருந்து தப்பியோடிய ராகேஷைத் தனிப்படை அமைத்துத் தேடிய போலீஸார், விரைந்து செயல்பட்டு அவரைத் தலைமறைவாக இருந்த இடத்தில் வைத்துக் கைது செய்தனர். கைதான ராகேஷ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். வெறும் செல்போன் பயன்பாட்டிற்காக ஏற்பட்ட வாக்குவாதம், மது போதையால் ஒரு உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.