“சர்க்கார் பாணி சம்பவம்.. எங்க என் ஓட்டை காணோம்”… ஓட்டு போட வந்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்…!

By Nanthini on சித்திரை 24, 2026

Spread the love

திண்டுக்கல் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட 128-வது வாக்குச்சாவடியில், முதல்முறை வாக்காளரான துவாரகேஷ் என்பவர் மிகுந்த ஆர்வத்துடன் தனது வாக்கைப் பதிவு செய்ய வந்திருந்தார். ஆனால், அவரது வரிசை எண் 720-ல் ஏற்கனவே வாக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறியது அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் திமுகவினர், உரிய ஆவணங்கள் இருந்தும் கள்ள ஓட்டு போட அனுமதித்தது எப்படி என்று அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தலையிட்டுச் சூழலைச் சீர்செய்தனர். இறுதியாக, தேர்தல் விதிகளின்படி துவாரகேஷிற்கு ‘டெண்டர் ஓட்டு’ (Tendered Vote) அளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் தனது முதல் வாக்கை அவர் வெற்றிகரமாகப் பதிவு செய்தார். இதேபோல், திண்டுக்கல் ஓ.எம்.ஆர் பட்டி பகுதியில் உள்ள கென்னடி பள்ளியில் அமைக்கப்பட்ட 278-வது வாக்குச்சாவடியிலும் தீயணைப்பு வீரர் கணேசன் என்பவரது வாக்கு மர்ம நபர்களால் ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

தனது வாக்கு திருடப்பட்டதால் அதிருப்தியடைந்த கணேசன் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் சரவணனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்த ஆட்சியர், பாதிக்கப்பட்ட வாக்காளருக்கு டெண்டர் ஓட்டு அளிக்க முழு உரிமை உண்டு என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது இது கணக்கில் கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கள்ள ஓட்டு போட்ட நபரைக் கண்டறிந்து, அந்த முறையற்ற வாக்கு உடனடியாக ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

   

ஆட்சியரின் உறுதிமொழியைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர் கணேசன் மீண்டும் வாக்குச்சாவடிக்குச் சென்று தனது டெண்டர் வாக்கினைப் பதிவு செய்தார். தன் அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஜனநாயக உரிமையைப் பறிக்க முயன்ற நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு சம்பவங்களும், கள்ள ஓட்டு குறித்த புகார்களும் தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.