ஜெர்மனி தலைநகர் பெர்லினில், ஈரானின் முன்னாள் பட்டத்து இளவரசரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரேசா பஹ்லவி (Reza Pahlavi) மீது மர்ம நபர் ஒருவர் சிவப்பு நிற திரவத்தை வீசித் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மறைந்த ஷா முகமது ரேசா பஹ்லவியின் மகனான ரேசா பஹ்லவி, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் நேற்று (ஏப்ரல் 23, 2026) பெர்லினில் உள்ள பெடரல் பிரஸ் கான்பரன்ஸ் கட்டிடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சந்திப்பு முடிந்து அவர் வெளியே வந்து தனது காரை நோக்கிச் சென்றபோது, பின்னால் இருந்து வந்த ஒரு நபர் அவர் மீது ‘தக்காளி சாறு’ எனக் கருதப்படும் சிவப்பு நிற திரவத்தை ஊற்றினார்.
இந்தத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான போதிலும், பஹ்லவி நிதானத்தை இழக்காமல் தனது ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு காரில் ஏறிச் சென்றார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்தத்தை ரேசா பஹ்லவி கடுமையாக விமர்சித்து வருகிறார். ஈரானில் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என்றும், போர்நிறுத்தம் என்பது ஈரானிய அரசாங்கத்திற்குச் சாதகமாக முடியும் என்றும் அவர் வாதிட்டார். அவரது இந்தப் போர் ஆதரவுப் பேச்சால் அதிருப்தியடைந்த செயற்பாட்டாளர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.
An Iranian demonstrator threw tomato sauce at Reza Pahlavi during an appearance in Berlin, Germany. pic.twitter.com/jBpoyvAOIX
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 23, 2026
சம்பவம் நடந்த இடத்திலேயே அந்த மர்ம நபரை ஜெர்மனி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அந்தத் திரவம் தக்காளி ஜூஸ் போன்ற ஒரு பொருள் என்றும், இளவரசருக்குப் பெரிய காயங்கள் ஏதுமில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் 19 அரசியல் கைதிகள் தூக்கிலிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பஹ்லவி, “சர்வதேச சமூகம் இந்த படுகொலைகளை மௌனமாகப் பார்க்கப் போகிறதா?” என்று கேள்வி எழுப்பிய நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
