“ஒரே போன் கால்… அடங்கிய பீரங்கிகள்”… உலகே எதிர்பார்த்த அந்த 10 நாட்கள்…. டிரம்ப் கையில் எடுத்த ‘அமைதி’ ஆயுதம்… இப்படி ஒரு முடிவா…?

By Nanthini on சித்திரை 17, 2026

Spread the love

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஆவுன் ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் தேசங்களுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தனது எக்ஸ் தளத்தில் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நகர்வு, ஈரானுடனான ஒரு பெரும் மோதலைத் தவிர்ப்பதற்கான முக்கியமான ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தமானது வாஷிங்டன் நேரப்படி இன்று மாலை 5 மணி முதல் முறைப்படி நடைமுறைக்கு வருகிறது. ஏற்கனவே பிப்ரவரி மாதம் முதல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே போர் நடந்து வந்த நிலையில், ஏப்ரல் 7 முதல் ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இருப்பினும், அதில் லெபனான் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், ஈரானின் தொடர் வலியுறுத்தலை அடுத்து தற்போது லெபனானும் இந்த அமைதி முன்னெடுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தவிர்த்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த உடன்படிக்கை பிராந்தியத்தில் ஒரு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

   

அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக வாய் திறக்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியதுடன், பாதுகாப்பு மண்டலத்தைப் பலப்படுத்தவும் அவர் உத்தரவிட்டிருந்தார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, அதே வேளையில் ஒருவேளை சண்டை மீண்டும் தொடங்கினால் அதை எதிர்கொள்ளத் தங்கள் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.