மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் உயர்மட்ட தலைவர்களை அமெரிக்கா குறிவைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான் புரட்சிகரப் படை, அதற்குப் பதிலடியாக அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, பஹ்ரைன் நாட்டின் ஹமாலா பகுதியில் அமைந்துள்ள ‘பாட்டெல்கோ’ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமையகம் மீது ஈரான் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் அமைப்பின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை வழங்கி வரும் முக்கிய உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளதால், அமேசானின் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஈரானின் இந்தத் தாக்குதலால் பஹ்ரைனின் சில பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஆப்பிள், கூகுள், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈரான் தனது இலக்குப் பட்டியலில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இத்தகைய தாக்குதல்கள் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் ஐடி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து, அதன் வழியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தைப் பணிய வைக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமேசான் தரவு மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், தற்போதைய நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
