“மைதானத்தில் அழுத ஜட்டு…” சிஎஸ்கே அணிக்கு எதிராக விக்கெட் வீழ்த்திய பின் ஜடேஜா கண்கலங்கியது ஏன்…? வைரல் வீடியோ…!!

By Devi Ramu on பங்குனி 31, 2026

Spread the love

கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணிக்காகக் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, தனது முன்னாள் அணியான சென்னைக்கு எதிராக அபாரமாகப் பந்துவீசினார். 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வழங்கி, சர்பராஸ் கான் மற்றும் சிவம் துபே ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளைச் சரித்து சென்னை அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தார். ஜடேஜாவின் இந்த துல்லியமான பந்துவீச்சால் சென்னை அணி 127 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் நடுப்பகுதியில் ரவீந்திர ஜடேஜா மைதானத்திலேயே உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பல ஆண்டுகளாகச் சென்னை அணியின் வெற்றிக்குத் தூணாகவும், ரசிகர்களின் செல்லப் பிள்ளையாகவும் விளங்கிய ஜடேஜா, இப்போது அதே அணிக்கு எதிராக விளையாடி அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததை எண்ணி வருத்தப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜடேஜாவின் இந்த உணர்ச்சிகரமான செயல் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிரணியில் இருந்தாலும் சிஎஸ்கே மீதான அவரது பாசம் குறையவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.