மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில், குவைத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் (36) என்ற தமிழர் உயிரிழந்தார். அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக அங்கு எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பணி முடிந்து அறைக்குத் திரும்பியவரை, அவசர வேலைக்காக மீண்டும் ஆலைக்கு அழைத்துள்ளனர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர் சிக்கிக்கொண்டதாக அவருடன் பணியாற்றும் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். 36 வயதான சந்தான செல்வத்திற்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். “கம்பெனியிலிருந்து அழைப்பு வருகிறது” எனக் கூறி கடைசியாகப் பேசிய கணவர், பிணமாகத் திரும்புவதை எண்ணிக் கௌசல்யா கண்ணீர் விட்டுப் புலம்புகிறார். தமிழக அரசின் சார்பில் உரிய இழப்பீடும், காப்பீட்டுத் தொகையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை திருச்சி விமான நிலையத்திற்கு உடல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
