தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கையோடு, மின்னல் வேகப் பரப்புரையை அவர் தொடங்கினார். குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலினின் கோட்டையான கொளத்தூர் தொகுதியில் அவர் மேற்கொண்ட பரப்புரை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆனால், முதல் நாள் பரப்புரையிலேயே அவருக்குச் சட்டச் சிக்கல்கள் முளைத்துள்ளன.
கொளத்தூரில் பரப்புரை செய்தபோது பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக, நிலை கண்காணிப்பு குழு அதிகாரி குமார் அளித்த புகாரின் பேரில், விஜய் மீது காவல்துறை ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்னதாக வில்லிவாக்கம் பகுதியில் அவர் பரப்புரை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாகப் பாதுகாப்பு கருதி அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பரப்புரையின் முதல் நாளிலேயே விஜய் மீது வழக்குப் பாய்ந்திருப்பது அவரது தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
