தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக இருந்து வரும் ஃபாஸ்டாக் (FASTag) வருடாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்தி அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுவரை 3,000 ரூபாயாக இருந்த இந்த பாஸின் கட்டணம், 75 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,075 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் குறிப்பாக வணிகம் அல்லாத (Non-commercial) வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், முறையான ஃபாஸ்டாக் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வருடாந்திர பாஸைப் பெற முடியும் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு இந்த வருடாந்திர பாஸ் ஒரு வரப்பிரசாதமாகும். இது ஒரு வருட காலத்திற்கு அல்லது 200 சுங்கச்சாவடி கடப்புகள் (Passes) ஆகியவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும். இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தேவையிருக்காது. இந்த வசதியைப் பெற விரும்புவோர், ஃபாஸ்டாக் செயலியில் (FASTag App) உள்நுழைந்து, ‘வருடாந்திர பாஸ்’ (Annual Pass) விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்தி எளிதாக ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
