“சினிமா வேற.. நிஜம் வேற.. தூங்கி எழுந்தா எல்லாம் கலைஞ்சுடும்”… விஜய்யை ‘நாக்-அவுட்’ செய்த எடப்பாடி… அலறும் அரசியல் கட்சிகள்….!

By Nanthini on பங்குனி 28, 2026

Spread the love

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் களம், நான்கு முனைப் போட்டியால் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமு‌க, அதிமுக, நாம் தமிழர் மற்றும் முதல் முறையாகக் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எனப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தாம்பரத்தில் மேற்கொண்ட பிரச்சாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் பெயர் குறிப்பிடாமல் அவரை “சினிமா வாழ்க்கை வேற, நிஜ வாழ்க்கை வேற” என மறைமுகமாகச் சாடிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, அவர்களை ஓரிடத்திற்கு வரவழைத்து விஜய் சந்திப்பு நடத்தியதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். “இறந்தவர்கள் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொல்வதே மரபு, ஆனால் ஒரு கட்சி அவர்களை வரவழைத்து அனுதாபம் சொல்கிறது; இது என்ன மாதிரியான அரசியல்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், இதையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய தருணம் இது என்றும் ஆவேசமாகப் பேசினார்.

   

திரைப்படத் துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதை விமர்சித்த எடப்பாடி, “சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு சாதனம் மட்டுமே. சினிமாவில் பார்ப்பது எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்த மாயை. நிஜ வாழ்க்கை என்பது கடினமானது, யதார்த்தமானது. கனவில் காணும் காட்சிகள் தூங்கி எழுந்ததும் மறைந்துவிடும், அதுபோலவே சினிமா அரசியலும் எடுபடாது” எனத் தொண்டர்களிடையே உரையாற்றினார். மக்கள் சினிமா கவர்ச்சியில் ஏமாறாமல், நிஜ வாழ்வின் தேவைகளைப் புரிந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

   

மற்றொருபுறம், பாஜக – அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பிருப்பதாக நிலவிய வதந்திகளுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விஜய்யை கூட்டணியில் இணைத்தால் அது அதிமுக-பாஜகவின் வாக்கு வங்கிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என அமித்ஷா தெளிவுபடுத்தியுள்ளார். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க விஜய் தயாராகி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நேரடித் தாக்குதல் தமிழகத் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.