கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட ‘டிரோன்’ காட்சிகள் சாதாரணமானவை அல்ல என்றும், அவை விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ரகசியமாக படமாக்கப்பட்டவை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. மக்கள் கூட்டத்தை வெறும் அரசியல் பலத்தைக் காட்ட மட்டுமல்லாமல், சினிமா படப்பிடிப்பிற்காகவும் பயன்படுத்தியது சட்டப்படி குற்றம் என்ற ரீதியில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சமீபத்தில் டெல்லியில் விஜய்யிடம் நடத்தப்பட்ட சுமார் 7 மணிநேர விசாரணையில், பெரும்பாலான கேள்விகள் இந்த ‘மூவி ஷூட்டிங்’ விவகாரத்தைச் சுற்றியே இருந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக, ஐமேக்ஸ் தரத்திலான கேமராக்களைச் சுமந்து சென்ற டிரோன்கள் மற்றும் விஜய்யின் வாகனம் நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விட 20 மீட்டர் தள்ளிச் சென்றது ஆகியவை ஒரு சினிமா ஷாட்டிற்காகத் திட்டமிடப்பட்டதா என்ற கோணத்தில் சிபிஐ துருவித் துருவி ஆராய்ந்து வருகிறது. இந்த ஆதாரங்கள் தவெக தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக ‘ஜனநாயகன்’ படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்புத் தரப்பைச் சேர்ந்த முக்கிய நபர்களைக் கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாடு நடந்த அன்று பாதுகாப்பு விதிகளை மீறி சினிமா படப்பிடிப்பு நடத்தியது உறுதி செய்யப்பட்டால், படக்குழுவினர் மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு இது பெரும் பின்னடைவாக அமையும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே சிபிஐ வசம் சிக்கியுள்ள டிரோன் வீடியோக்கள் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாகப் பார்க்கப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சிபிஐயின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கு இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் சிபிஐயின் அடுத்தகட்ட கைது நடவடிக்கைகள் யார் மீது பாயப்போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமே உற்று நோக்குகிக் கொண்டிருக்கிறது.
