“என்ன பெண் குழந்தை வேண்டாம்”… மாமனாரையும் மனைவியையும் சுத்தியலால் அடித்துத் தீவைத்த கொடூரம்…. நள்ளிரவில் கணவன் செய்த நடுங்கவைக்கும் சம்பவம்….!

By Nanthini on பங்குனி 19, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் கடிபிகொண்டா கிராமத்தில், பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியையும் மாமனாரையும் கணவன் தீயிட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரான ராஜசேகர் (51), தனது மூத்த மகள் ராஜஸ்ரீயை கடந்த 2023-ம் ஆண்டு பிரவீன் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். திருமணத்தின் போது 3 லட்சம் ரூபாய் வரதட்சணை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

பெண் குழந்தை பிறந்த பிறகு, பிரவீன் தனது மனைவி ராஜஸ்ரீயிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கிடையில், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ராஜஸ்ரீ தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு வந்த பிரவீன், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் வரதட்சணை தொடர்பாகத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், புதன்கிழமை அதிகாலையில் யாரும் எதிர்பாராத விதமாகப் பிரவீன் இந்த பயங்கர செயலில் இறங்கினான்.

   

வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து, உறங்கிக் கொண்டிருந்த மாமனார் ராஜசேகர் மற்றும் மனைவி ராஜஸ்ரீ ஆகிய இருவரின் தலையிலும் பலமாகத் தாக்கினான். இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று கருதிய பிரவீன், தான் ஏற்கனவே திட்டமிட்டு வாங்கி வைத்திருந்த டீசலை அவர்கள் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். பின்னர், தனது மனைவியின் அத்தைக்கும் சகோதரிக்கும் போன் செய்து, அவர்கள் இருவரும் தீ விபத்தில் சிக்கிவிட்டதாக நாடகமாடினான். ஆனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள், உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

   

கொலை செய்த கையோடு தனது இரண்டு குழந்தைகளுடன் தப்ப முயன்ற பிரவீனை, அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த மக்கள், அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கடந்த பிப்ரவரி மாதமே இந்தக் கொலைகளுக்குப் பிரவீன் திட்டமிட்டு டீசலைச் சேகரித்து வைத்திருந்தது தெரியவந்தது. வரதட்சணை எனும் சமூகக் கொடுமையால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.