தந்தை என்ற புதிய பரிமாணத்தை எட்டும் போது ஒவ்வொரு ஆணுக்கும் ஏற்படும் அந்தப் பரவசமான தருணத்தை விவரிக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இதயங்களை வென்று வருகிறது. சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில், மருத்துவர் சுகன்யா சரவணகுமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தக் காட்சியில், ஒரு தந்தை தனது பச்சிளம் குழந்தையை முதல்முறையாக கையில் ஏந்தும் போது ஏற்படும் பதற்றமும், நெகிழ்ச்சியும் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் “மிகவும் வலிமையான ஒரு மனிதனின் கைகள் கூட, அந்தச் சிறிய மகிழ்ச்சியைத் தாங்கும்போது நடுங்குகின்றன” என்ற அந்த மருத்துவரின் வரிகள், அத்தந்தையின் உணர்ச்சிகரமான போராட்டத்தை அழகாகப் பிரதிபலிக்கின்றன.
View this post on Instagram
“>
இந்த வைரல் காணொளியில், மருத்துவர் குழந்தையை அவரிடம் ஒப்படைக்கும் போது, அந்தக் கைகளில் தென்படும் ஒருவித தயக்கமும், குழந்தைக்கு எங்கே ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயமும் பலரை நெகிழச் செய்துள்ளது. மருத்துவர் அவருக்கு ஆறுதல் கூறி குழந்தையை எப்படி அணைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த பிறகு, கண்கள் பனிக்க அத்தந்தை குழந்தையை ஏந்திய தருணம் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை 190 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்தக் காணொளிக்கு, “ஒவ்வொரு தந்தையும் கடந்து வந்த மிகச்சிறந்த தருணம் இது” என்றும், “உலகிலேயே மிகவும் கனமான பொருளை அவர் இப்போதுதான் கைகளில் சுமக்கிறார்” என்றும் நெட்டிசன்கள் தங்களின் உணர்ச்சிகரமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
