நகை, சொத்துக்களை விற்று 16 லட்சம் லஞ்சம் கொடுத்தும் நிம்மதியில்ல… “சார்… என் வேலையை முடிச்சுக் கொடுங்க” கண்ணீருடன் கெஞ்சியும் விடாத அரசு அதிகாரிகள்.. உ.பி ஆசிரியர் தற்கொலையில் அதிரடித் திருப்பம்..!!

By Soundarya on பங்குனி 3, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் தேவ்ரியாவில் ஆசிரியர் கிருஷ்ண மோகன் சிங் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக, அவருக்கும் அடிப்படை கல்வி அலுவலகத்தின் (BSA) எழுத்தர் சஞ்சீவ் சிங்கிற்கும் இடையே நடந்த உரையாடல் அடங்கிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், தனது நிலுவையில் உள்ள பணிகளை முடித்துக் கொடுக்குமாறு ஆசிரியர் கிருஷ்ண மோகன் சிங் கண்ணீருடன் எழுத்தரிடம் கெஞ்சுவது பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தனது பணியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை விடுவிப்பதற்காகவும் ஆசிரியர் கிருஷ்ண மோகன் சுமார் ₹16 லட்சம் வரை லஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. தனது நகை மற்றும் சொத்துக்களை அடகு வைத்து இந்தப் பணத்தைக் கொடுத்த பிறகும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவரைக் கூடுதல் பணம் கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

   

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய அரசு, மாவட்ட அடிப்படை கல்வி அலுவலர் (BSA) ஷாலினி ஸ்ரீவஸ்தவாவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட எழுத்தர் சஞ்சீவ் சிங்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அம்மாநில ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.