“அதிமுகவில் இணைந்த 7 நாட்களில்”…. லீமா ரோஸுக்கு எடப்பாடி கொடுத்த ‘வெயிட்டான’ பதவி… ஆடிப்போன அரசியல் களம்….!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், ஐஜேகே கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான லீமா ரோஸ், கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஒரு வார காலத்திற்குள்ளேயே அவருக்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்பை வழங்கி அதிமுக தலைமை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி (IJK) ஆகியவற்றில் பணியாற்றிய லீமா ரோஸ், அண்மையில் ஐஜேகே-வில் இருந்து விலகினார். கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்த அவர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

   

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் லீமா ரோஸ் மார்ட்டின் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மாநில அளவிலான இந்த “வெயிட்டான” பதவி அவருக்கு வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பதவியின் மூலம் தேர்தல் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபடுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

அதிமுகவின் இந்த அதிரடி முடிவின் பின்னணியில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க லீமா ரோஸிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில் மாநிலப் பொறுப்பைப் பெற்றுள்ள லீமா ரோஸின் நியமனம் அதிமுக வட்டாரத்தில் ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது.