தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடை ஊழியர்கள் சங்கம், மார்ச் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அதிரடி முடிவை ஊழியர்கள் சங்கம் எடுத்துள்ளது. வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து, தற்போது ரேஷன் கடை பணியாளர்களும் தங்கள் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வீதியில் இறங்கியுள்ளனர்.
அரசு ஏற்கனவே பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்து போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், ரேஷன் கடை ஊழியர்களும் அதே போன்றதொரு தீர்வை அரசிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். மார்ச் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களைப் பெறும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
