தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் பரவி வருவதால், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்புமே இந்த வாக்குறுதியைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் முன்னிலைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான நிதிச் சுமைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசின் நிதி நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு மட்டும் இந்தச் சலுகையை வழங்குவது குறித்த ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போதே அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
