2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) அடிமட்ட அளவில் வலுப்படுத்தத் தலைவர் விஜய் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், கட்சிப் பணிகளை விரைவுபடுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் ஏற்கெனவே இருந்த மாவட்ட அமைப்புகளை மாற்றி அமைத்துள்ளார். அதன்படி, 128 மாவட்டங்களாக இருந்த கட்சி அமைப்பு, தற்போது மேலும் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களையும், நிர்வாகிகளையும் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் களத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், புதிய நிர்வாகிகளுக்குத் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மாவட்டப் பிரிப்பு, பூத் கமிட்டி பணிகளைத் தீவிரப்படுத்தி தேர்தலைச் சந்திக்க தவெக தயாராகி வருவதையே காட்டுகிறது.
