“தைரியம் இருந்தா தனியா நில்லுங்க” சாணக்ய தந்திரமா..? சீட் பேரமா..? பிரேமலதாவுக்கு புளூ சட்டை மாறன் விடுத்த ஓப்பன் சேலஞ்ச்..!!

By Soundarya on மாசி 10, 2026

Spread the love

தேமுதிக-வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (X) தளத்தில் அக்கட்சியைச் சாடிப் பதிவிட்டுள்ளார். “கொள்கை என்று ஒன்று இருந்தால் இந்நேரம் பொருத்தமான கூட்டணியில் இணைந்திருப்பீர்கள்; பொங்கலுக்குப் பிறகு அறிவிப்பு என்றீர்கள், பொங்கல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் எந்த அறிவிப்பும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது சாணக்ய தந்திரம் அல்ல என்றும், திமுக அல்லது அதிமுக கூட்டணியில் யார் அதிக இடங்களைத் தருகிறார்களோ அங்கு இணையவே இந்தக் காத்திருப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மக்களுக்கு உங்கள் கூட்டணி குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று கூறியுள்ள அவர், தேமுதிக-வின் செல்வாக்கை நிரூபிக்க முடிந்தால் தைரியமாகத் தனித்துப் போட்டியிடுமாறு சவால் விடுத்துள்ளார். திராவிடக் கொள்கை என்றால் திமுக-வுடனும், ஆரியம் என்றால் அதிமுக-பாஜக கூட்டணியுடனும் சேர வேண்டியதுதானே, இதற்கு ஏன் இத்தனை காலதாமதம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “தேமுதிக துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பது ஒரு நகைச்சுவை” என்று பதிவிட்டுள்ள அவர், நடப்பதைப் பார்த்தால் தேர்தல் முடிந்த பிறகுதான் கூட்டணி அறிவிப்பு வரும் போலிருக்கிறது எனத் தேமுதிக-வின் அரசியல் நகர்வுகளைக் கிண்டலடித்துள்ளார்.