“தேதி குறித்த ஸ்டாலின்”…. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும்… அதிரடியாக களமிறங்கும் அந்த 20 ‘நட்சத்திரங்கள்’…..!

By Nanthini on தை 28, 2026

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் பிப்ரவரி மாதம் முழுவதும் மாநிலம் தழுவிய பிரம்மாண்ட பரப்புரை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் இந்தத் தீவிரப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்த பரப்புரைக்காக திமுக தலைவரால் 20 நட்சத்திரப் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுக்கூட்டங்களை நடத்துவதுடன், இளைஞர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், மக்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறியும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரையை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்களுக்கு துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.