நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், பிரபல மேடைப் பேச்சாளருமான காளியம்மாள் நாளை அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், அதன் பிறகு எந்தக் கட்சியிலும் சேராமல் தனி நபராகப் பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.
அவர் திமுக, அதிமுக அல்லது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்று கடந்த சில மாதங்களாகவே அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்கள் உலா வந்தன. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறந்த பேச்சாளரான காளியம்மாளின் வருகை, தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
