பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விரதம் இருப்பதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்று தெரிவித்துள்ள கருத்து தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் 2026 ஜனவரி 13 அன்று நடைபெற்ற விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் இளைஞர் தின விழாவில் பேசிய அவர், சாதாரண திசுக்களை விட புற்றுநோய் செல்கள் உயிர்வாழ 7 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். ஒருவர் 24 மணி நேரம் விரதம் இருந்தால், புற்றுநோய் செல்களுக்குச் செல்லும் ஆற்றல் துண்டிக்கப்பட்டு அவை இறந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.
வாரத்திற்கு ஒருமுறை (செவ்வாய் அல்லது சனிக்கிழமை) விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் தானாகவே அழிந்துவிடும் என்றும், சஷ்டி விரதம் போன்ற 7 நாள் விரதங்களை மேற்கொண்டால் உடலில் மறைந்திருக்கும் புற்றுநோய் செல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்றும் அவர் விளக்கமளித்தார். துரித உணவுகள் மற்றும் வறுத்த கோழி போன்ற உணவுகளைத் தவிர்த்து, முன்னோர்கள் பின்பற்றிய விரத முறைகளை இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்
