தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜனவரி 10, 2026) பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ‘மஞ்சள் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
