தமிழ் சினிமாவில் அடையாளம் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 84 வயதான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது மகன் மனோஜை இழந்ததால் மிகவும் உடைந்து போனார். உடல் நலம் மிக மோசமடைந்த நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் சில தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் முழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை நேரில் சந்தித்து திரும்பிய கவிஞர் வைரமுத்து, தனது பதிவை கவிதையாக வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறி வருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடைந்த சொற்களாயினும் உரக்கப்பேச ஆசைப்படுகிறார். ஓர் உயிர் துடிக்கும் உடல்மொழியைப் பார்த்தேன். என் வலக்கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டார்.
அந்தப் ஸ்பரிசத்தில் எத்துணை செய்திகள்! எத்துணை உணர்வுகள்! 45 ஆண்டு காலக் கலைச் சரித்திரம் எங்கள் உள்ளங்கைகளுக்கிடையே நசுங்கியது. நான் மட்டுமா? கருவேலங்காட்டுக் கரிச்சான்களும் அவர் நலம் கேட்குமே! எங்கள் கிராமத்துச் சூரிய காந்திப் பூக்களும் அவர் சுகம் கேட்குமே!
வைகை அலைகள் வா வா சொல்லுமே! மகா கலைஞனே! விரைவில் மீண்டு வா ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற உன் கரகரப்பான காட்டுக் குரலுக்காக ‘ஆஸ்பத்திரி’க்கு வெளியே அலைபாய்கிறது காற்று என்று தனது எக்ஸ் பக்கத்தில் தனது நண்பர் பாரதிராஜா குறித்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
