கோயம்புத்தூர் குனியமுத்தூர் அருகே உள்ள நரசிம்மபுரம் பகுதியில் வசிப்பவர் ஜெபமார்ட்டின். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக அவர் தனது குடும்பத்துடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், ஆளில்லாத நேரத்தைப் பயன்படுத்தி அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்த அந்த கும்பல், அதிலிருந்த சுமார் 103 சவரன் தங்க நகைகளைச் சுருட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. உறவினர் வீட்டிலிருந்து திரும்பிய ஆசிரியர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், நகைகள் கொள்ளை போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குனியமுத்தூர் காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண்டிகைக் காலத்தில் ஒரு ஆசிரியர் வீட்டில் இவ்வளவு பெரிய கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
