கேரள மாநிலம் எர்ணாகுளம் – புனே இடையே ஓடும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை கண்ணூர் அருகே தண்டவாள பகுதியில் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தண்டவாளம் ஓரமாக இரண்டு பேர் ரயிலை நோக்கி சிவப்பு விளக்கை காண்பித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் என்ஜின் டிரைவர் ஏதோ ஆபத்து இருப்பதாக கருதி உடனே ரயிலை நிறுத்தியுள்ளார். ரயில் நின்றதும் என்ஜின் டிரைவர் இறங்கி பார்த்தபோது ரயிலை நிறுத்திய இருவரும் சிறுவர்கள் என தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரயிலை சிவப்பு விளக்கு காட்டி நிறுத்தியதாக கூறியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து விரைந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இரண்டு சிறுவர்களையும் பிடித்து விசாரித்தனர். அதில் இரண்டு சிறுவர்களும் 12 ஆம் வகுப்பு படித்து வருவது தெரிய வந்தது. தொடர்ந்து இனி மேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று போலீசார் எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர். திடீரென நடுவழியில் ரயில் நின்றதால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
