சேலம் மாவட்டம் இடங்கணசாலை அடுத்துள்ள கேகே நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவருடைய மகன் கௌதம் (25). இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கும் இவருடைய உறவுக்கார சகோதரரான சிவமூர்த்தி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கௌதம் அவருடைய அண்ணனை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கௌதமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த கௌதம் தினமும் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில் தினமும் காவல் நிலையத்திற்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். அதேபோல நேற்று முன்தினம் மாலை காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற கவுதம் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த கௌதமின் பெற்றோர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கௌதமை தேடி வந்த நிலையில் அன்று இரவு இரும்பாலை அருகே சிட்டனூர் பகுதியை ஒட்டி உள்ள இரும்பாலைக்கு சொந்தமான நிலத்தில் கௌதம் கொலை செய்யப்பட்டு அவருடைய உடல் தலை இல்லாமல் கிடந்துள்ளது. அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் தலையைத் தேடி வந்த நிலையில் உடல் இருந்த பகுதிக்கு சற்று தொலைவில் தலை போட்டு நசுக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த கௌதமியின் நண்பர்களான தனுஷ் (22) மற்றும் மூர்த்தி (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த திருவிழாவின்போது கௌதம் குடித்துவிட்டு நண்பர்களான தனுஷ் மற்றும் மூர்த்தியை தகாத வார்த்தைகளை பேசி அடித்ததால் ஆத்திரத்தில் இருந்த இருவரும் கௌதமை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
