கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கமலக்கண்ணன் (46). ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்த இவருக்கு, லாவண்யா, ரீனா, ரிஷிகா என்ற 3 மகள்களும், அபினேஷ் என்ற மகனும் உள்ளனர். கமலக்கண்ணன் கூலி வேலை செய்து நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்து வந்தார்.
இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு சிறுநீரகப் பாதிப்பால் கமலக்கண்ணன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தின் ஒரே வருமானம் பாதிக்கப்பட்டதால், பொறியியல் படித்து வந்த மூத்த மகள் உட்பட மூன்று பிள்ளைகளும் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தங்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமலக்கண்ணன், கடந்த நவம்பர் 14ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே தாயை இழந்த நான்கு பிள்ளைகளும், தந்தையின் உடலை அடக்கம் செய்யக்கூட வழியில்லாமல் நிர்கதியாக நின்றனர். உறவினர்கள் ஏழ்மையான நிலையில் இருந்ததால், அவர்களாலும் உதவ முடியவில்லை.
இந்த சூழலில், பரிதவித்த குழந்தைகளின் நிலையைக் கண்டு மனம் இரங்கிய கிராம மக்கள், அவர்களே முன்வந்து வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி, கமலக்கண்ணனின் உடலை அடக்கம் செய்தனர். பெற்றோரை இழந்து, கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கும் இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
