தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் திமுக கூட்டணியை விட்டு வேறு கூட்டணியை சிந்திப்பதே கிடையாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் குறைந்தது ஐந்து தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைப்போம் என்று அவர் கூறியுள்ளார். 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற இந்த கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது கூடுதல் தொகுதிகளை கேட்பது திமுகவுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளது.
