இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு என்பது மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது ஒரு வீடியோ வெளியாகி ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்னாவை சேர்ந்த ரவி திவேதி என்ற பயணி ரயிலில் பயணித்த போது Amrit Bharat express ரயிலில் ஒருமுறை பயன்படுத்தும் உணவு பாத்திரங்கள் கழுவி மீண்டும் பயன்படுத்தப்படுவது குறித்து அதிர்ச்சி தரும் வீடியோவை பகிர்ந்துள்ளார். பேன்ட்ரி காரின் அருகில் நின்ற போது பயன்படுத்தப்பட்ட தட்டுகள் குப்பை தொட்டியில் இருந்து எடுத்து வாஷ்பேஷனில் கழுவப்படுவதை நேரில் கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கேள்வி கேட்டபோது, அந்த ஊழியர், இந்த பொருட்கள் பாதி விலைக்கு திருப்பி தரப்படுகின்றன, அதனால் அவைகளை கழுவி மீண்டும் பயன்படுத்துகிறோம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். பிறகு வீடியோ பதிவு செய்யப்படுவதை உணர்ந்த அந்த ஊழியர் ரவியை மிரட்டி வீடியோ பதிவை நிறுத்துமாறு எச்சரித்துள்ளார். பிறகு அந்த வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்திய ரயில்வே கேட்டரிங் சேவைகளின் சுகாதார தரநிலைகள் தொடர்பாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் ஆரோக்கியம் முன்னுரிமை பெறவேண்டிய சூழலில் இவ்வாறான செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
